சிற்பத்தின் எழில் போல
சிந்தைதனை மயக்கி எனைச்
சீர்குலைத்த பெண்மயிலே !
சிறகெடுத்துப் பறந்துவா
தென்னகத்துக் குலமகளாம்
தேனாற்றின் பெருந்துளியாம்
என்னிதயத் திருவிளக்கே
என்மண்ணின் ஒளிவடிவே !
எனக்காக ஒரு நிமிடம்....
ஏந்திழையே தருவாயா ?
முத்தமிழ்க் கலவை போல
முக்கனியின் சுவை போல
முப்பாலின் தரம் போல
முத்தெழிலே நீ இருக்க....
எக்காலம் தனில்
என் ஏக்கம் தணியுமினி ?
எப்பொழுதில் என் விழியை
எட்டிடும் உறக்கமதே ....
எனக்காக ஒரு நிமிடம் ...
என்னோடு பேசு கிளியே !
உன் பார்வை மயக்கத்தில்
உள்ளம் கிறங்கிப் போனதடி
உன் மொழியின் இனிமையிலே
உலகம் ஏனோ மறந்ததடி
மெல்லிடையை வளைத்து நீயும்
மெத்தெனவே அடியெடுத்து
பொத்தெனவே என் நெஞ்சை
பொசுக்கி விட்டுப் போகின்றாய்
எனக்காக ஒரு நிமிடம் ....
என்னவளே தாராயோ !
தத்தை போல பேசி நீயும்
தத்தளிப்பில் என்னை ஆழ்த்தி
தமிழாகிச் சுரந்து என்னுள் ஏனோ
தவழுகின்றாய் கவிதை உருவில்
நித்தம் எனக்கு மரணமடி
நித்திரையில் உந்தன் கனவு
பொற்கொடியே போதுமடி
பூங்கொடியே என்னைப் பாராய்
எனக்காக ஒரு நிமிடம் ....
கண்ணெதிரே வந்து விடு நான்
கண்மூடி நாளாச்சு........!
0 comments:
Post a Comment