Sunday, October 12, 2014

நண்பியாய் காதலி!

மஞ்சத்தில் மறைந்த முழுமதி போல்
நெஞ்சுக்குள் புதைத்த உன் நினைவை
அஞ்சி அஞ்சி காத்து வந்தேன்

வேஷமிடும் நாட்கள் இவை
நான் வேண்டாத பாத்திரத்தில்
வேஷமிடும் நாட்கள் இவை - உன்மேல்
பாசம் கொண்டிருந்தும்
அதை பகிர முடியாது
வேஷம் போடும் நாட்கள் இவை


உன்பாதை வழியே
என் பயணங்களை ஆக்கிக்கொண்டேன்
எனக்கென்று ஒரு தெரிவு
எப்போதும் இருந்ததில்லை
உனக்கான ஒரு தெரிவாய்
என்னை ஆக்கிக்கொள்ள
உன் பாதை வழியே
என் பயணங்களை ஆக்கிக்கொண்டேன்


சொல்ல நினைத்தால்
ஒரிரு வார்த்தைகள்தான்
சொல்லி முடித்திடலாம்
ஆனாலும் அதன் பின் அவை
கொல்லும் வாளாகவே
வெல்லும் தேராகவே மாறிவிடும்


சொல்லி விட்டாலும்
நீ எனக்கு சொல்லும் பதில்கள்
இவையாகத்தான் இருக்கும்
"அப்பாவின் முடிவுதான்"
"நான் அவ்வாறு பழகவில்லை"
"நட்பிற்கு அர்த்தம் தெரியாதவனே"
"எனக்கு வீட்டார் பார்த்து விட்டார்கள்"

இன்னும் பல ஏஞ்சும் பேச்சும்
இட்டுக்கட்டிய கதைகளும் நீ சொல்வாய்

இது தெரிந்தும் நான் ஏன் சொல்ல வேண்டும்
அந்த ஓரிரு வார்த்தை
அது எனக்கு வாளாகவும் அமைந்திடலாம்
என் கணக்கு தப்பி விட்டால்
எனக்கு தேராகவும் அமைந்திடலாம்


வார்த்தை ஒன்றைச்சொல்லி
இன்றே உன்னை- என்
வாழ்விலிருந்து இழக்கத்தயாரில்லை


இன்னும் உன்னுடன்
இறைவன் எனக்குத்தந்த நிமிடங்களை
சொல்லாத காதலொன்றால்
சொர்க்கம் ஆக்கப்போகிறேன்
நன்பனாகவோ? நாள்தோறும்
ஒரு தலை காதலனாகவோ!

0 comments:

Post a Comment