Wednesday, October 29, 2014

என் தந்தை எனக்கு ஆசான்.!

ஒவ்வொரு இடத்திலும்
உனக்கு பெயர்கள் வித்தியாசப்பட்டாலும்
எனக்கு பிடித்த பெயர்

அப்பா மட்டும்தான்!

உன்னைப்பிரிந்து..
வருடம் ஏழு ஆகிவிட்டதே-அப்பா!
நீ இல்லாத பொழுதுகள்
மின்சாரம் இல்லாத வீடாய்..!
மனிதர்களே இல்லாத காடாய்..!
அறுக்கும் முன் கத்தும் ஆடாய்..!
காட்சியளிக்கின்றது!


நீ என்னைப்பார்த்து சிரித்த..
கடைசி சிரிப்பு எது?
நீ என்னிடம் பேசிய..
கடைசி வார்த்தை எது?
நீ என்னைப் பார்த்த..
கடைசி பார்வை எது?
நீ என்னைத் தொட்ட..
கடைசி தொடுதல் எது?

முயற்சிகள் சிலநேரம்
முடக்கிவைக்கப்படும்பொழுது
தன்னம்பிக்கையாய் இதயத்தில்…
துளிர்த்து வருகிறாய் நீ!


நீ
உறவுப்பயணம் முடித்துச் சென்ற
அந்தி மாலை..
முன்பே தெரிந்திருந்தால்
முந்தைய பகலே!
நிறைய பேசியிருப்பேனே அப்பா?

உன் குழந்தையாய் நானானதுபோல்
என் குழந்தையாய் நீயாவாயா?
நடக்கப்போவதில்லை என்றாலும்
நப்பாசையில் கேட்கின்றேன்

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இல்லாமல் போன நாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…பேசவேண்டும்!

0 comments:

Post a Comment